மக்களவையில் பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், திராவிட இயக்கத்தின் முன்னோடியும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
அவர் பேசுகையில், “முத்தமிழ் அறிஞர் கருணாநிதி போன்ற பன்முக ஆளுமையை காண்பது அரிது. அவர் சமூக நீதிக்கும், சிறந்த ஆட்சி நிர்வாகத்திற்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். திராவிடக் கொள்கைகளின் சாம்பியனாக விளங்கிய அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
மேலும், மகாத்மா காந்தியைக் குறித்து அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் கூறிய, “இப்படி ஒரு மனிதர் சதையும் ரத்தமுமாக இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதை வருங்கால சந்ததியினர் நம்புவது கடினம்” என்ற வரிகள் கலைஞருக்கும் பொருந்தும் என்று அவர் புகழாரம் சூட்டினார்.
தஞ்சாவூர் கிராமத்தில் எளிய பின்னணியில் இருந்து வந்து தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்தவர் கலைஞர். 1957 முதல் 2016 வரை சுமார் 60 ஆண்டுகள் தான் போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடியவர். அரசியல் மற்றும் இலக்கியம் எனத் தனது ஆளுமையை விரிவுபடுத்திய அவருக்கு, இதுவரை திமுகவைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படாத பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தினார்.