சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. வரும் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
சிக்கல் என்ன?
உயர்நீதிமன்றத்தில் திவாலான தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தன்னிடம் கடனாகப் பெற்ற தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.21.78 கோடி செலுத்த உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், ஞானவேல் ராஜா கடனாகப் பெற்ற ரூ.21 கோடியைத் திருப்பிச் செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை திரையரங்குகள் அல்லது எந்தவொரு ஓடிடி தளத்திலும் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை காரணமாக, ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 12 அன்று திட்டமிட்டபடி வெளியாகுமா என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.